Tuesday, April 15, 2014

வயல்வெளிப் பள்ளி கேள்விகளும்... பதில்களும்! - 3

ஒவ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடையாக மலரும் இந்தப் பகுதியில், நெல் பயிரைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நெல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் ராபின்.
''ஒற்றை நாற்று நடவுக்கு, மேட்டுப்பாத்தி மூலம் நாற்றங்கால் தயார் செய்வது எப்படி?''
''தண்ணீர் வசதியோடு, களியும், மணலும் கலந்த இருமண் பாங்கான நிலத்தைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும். இரண்டு சால் உழவு செய்து, ஒரு ஏக்கருக்கு நான்கு சென்ட் நாற்றங்கால் தேவை. அதில் ஒரு சென்ட் நிலத்துக்கு 50 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைக் கொட்டி கலைத்துவிட வேண்டும். மீண்டும் இரண்டு சால் உழவு செய்து, 4 அடி அகலம், 4 அங்குல உயரத்துக்கு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்தியின் மீது, விதை பாவுவதற்கு முதல் நாள் ஒரு லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் பஞ்சகவ்யா, 50 கிராம் சூடோமோனஸ் கலந்த கலவையைத் தெளித்துவிட வேண்டும். பிறகு, முளைவிட்ட மூன்றாம் கொம்பு விதைகளை மேட்டுப்பாத்தியின் மீது தூவி... கொஞ்சம் தொழுவுரத்தையும் தூவ வேண்டும்.
ஒற்றை நாற்று நடவு என்றால், ஏக்கருக்கு 3 முதல் 4 கிலோ விதை தேவைப்படும். பிறகு, சுத்தமான வைக்கோலை (நெல் மணிகள் நீக்கம் செய்யப்பட்டது) கொண்டு மேட்டுப்பாத்திகளை மூடி, பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஏழு நாட்கள் வரை தொடர்ச்சியாக தினமும் இரண்டுவேளையும் இப்படி வாளியால் தண்ணீர் தெளித்து விட வேண்டும். 7-ம் நாளில் மேட்டுப்பாத்தியின் மீது இருக்கும் வைக்கோலை நீக்கினால், விதைகள் முளைப்பு எடுத்திருப்பது தெரியும். 10 முதல் 12 நாட்களில் ஒரு சென்ட் நிலத்துக்கு, இரண்டு கிலோ என்ற கணக்கில் வேப்பம் பிண்ணாக்கைத் தூவ வேண்டும். 14 முதல் 18 நாட்களில் நடவுக்கு நாற்று தயார் ஆகிவிடும்.''
''ஒற்றை நாற்று நடவுக்குத் தேவையான நாற்றுகளை பிளாஸ்டிக் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்வது எப்படி?''
''ஒரு ஏக்கர் நடவு செய்வதற்கு 10 பிளாஸ்டிக் தட்டுகளில் (ட்ரே) மண் அல்லது மணலையும், தொழுவுரத்தையும் சமஅளவில் கலந்து நிரப்பி, வழக்கமான முறையில் விதைநேர்த்தி செய்த தரமான விதைகளில் இரண்டு கிலோ அளவுக்கு தூவ வேண்டும். பிறகு, விதைகள் மீது சுத்தம் செய்யப்பட்ட வைக்கோலால் மூடி, பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு வாரத்தில் வைக்கோலை நீக்கிப் பார்த்தால் விதைகள் முளைத்திருப்பது நன்றாகத் தெரியும். இந்த முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்யும்போது நடவு வயல்களுக்கு எடுத்துச் செல்வதும், நடவு செய்வதும் எளிதாக இருக்கும்.''
''இயந்திர நடவுக்கான நாற்றுகளைத் தயார் செய்வது எப்படி?''
''இயந்திர நடவுக்கு பிளாஸ்டிக் தட்டுகளில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். இதற்காக முதலில், சேறு தயாரிக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு, 4 சென்ட் என்ற கணக்கில் நிலத்தை எடுத்துக் கொண்டு, உழவு செய்தால், அதில் உள்ள சேறு போதுமானதாக இருக்கும். ஏக்கருக்கு 150 பிளாஸ்டிக் தட்டுகள் தேவைப்படும். இந்தத் தட்டுகளில் சேறு நிரப்பி, ஒவ்வொரு தட்டுக்கும் 80 முதல் 85 கிராம் விதைகளைத் தூவ வேண்டும். இந்த முறையிலான நாற்றங்காலுக்கு, நெல் விதையை 12 மணி நேரம் ஊற வைத்தால் போதும். விதை தூவிய பிறகு, சுத்தமான வைக்கோல் போட்டு மூடி, மூன்று நாட்கள் வரை பூவாளியால் தண்ணீர் தெளித்துவர வேண்டும். பிறகு, வைக்கோலை நீக்கிவிட்டு, வழக்கமான முறையில் பராமரித்தால் போதுமானது. இந்த நாற்றுகளை 14 முதல் 17 நாட்களில் எடுத்து நடவு செய்யலாம்.''
''புழுதி நாற்றங்காலில் நாற்று உற்பத்தி செய்வது எப்படி?''
''தென்மேற்குப் பருவமழையை நம்பி இருக்கும் ஏரிகள் மற்றும் ஆற்றுப் பாசனம் நடக்கும் பகுதிகளில்... சேற்று நாற்றங்காலைப் பராமரிக்கும் அளவுக்கு தண்ணீர் இல்லை. அதனால், மழையை நம்பி புழுதி நாற்றங்கால் முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். நாற்றங்காலுக்கு எட்டு சென்ட் தேவைப்படும். நீண்ட கால ரகம் என்றால், 12 கிலோ விதை தேவைப்படும். மத்திய கால ரகம் என்றால், 16 கிலோவும், குறுகிய கால ரகம் என்றால் 24 கிலோவும், உயர் விளைச்சல் ரகம் என்றால் 8 கிலோ விதையும் இருந்தால் போதுமானது. முதலில் இரண்டு சால் புழுதி உழவு செய்து, 400 கிலோ தொழுவுரத்தைக் கொட்டிக் கலைத்து, மீண்டும் இரண்டு சால் புழுதி உழவு செய்து நிலத்தை 'பொலபொல’ப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு, நிலத்தைச் சமப்படுத்தி விதைக்க வேண்டும். பிறகு, மண்ணை பாவிவிட்டு, மேல்மண் அல்லது தொழுவுரத்தை விதை தெரியாத அளவுக்குத் தூவ வேண்டும்.
விதைகள் 20 முதல் 30 நாட்கள் வரை மழை இல்லாவிட்டாலும், பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கும். மழை கிடைத்த பிறகுதான் முளைக்கும். தண்ணீர் கட்டுவதற்கான வசதிகள் இருந்தால், நாற்றங்கால் முழுமை யாக நனையும் அளவுக்கு தண்ணீர் கட்டலாம். இந்த முறையில் எவ்வளவு தண்ணீர் கட்டினாலும் தேங்காது. முழுமை யாக தண்ணீர் கிடைத்த பிறகு, தொடர்ச்சியாக தண்ணீர் நிறுத்திக் கொள்ளலாம். அதற்குமேல் சேற்று நாற்றங்கால் போன்று பராமரித்து, அதே முறையில் நடவு செய்யலாம்.''
''நேரடி விதைப்புக்கு ஏற்றவை, பாரம்பரிய ரகங்களா... ஒட்டு ரகங்களா?''
''இரண்டு ரகங்களையும் நேரடி விதைப்பு செய்யலாம். ஆனால், ஒட்டுரகங்களைவிட பாரம்பரிய ரகங்கள் பல மடங்கு வறட்சியைத் தாங்கி வளரும் என்பதால், மானாவாரி நிலத்தில் பாரம்பரிய ரகங்களை விதைக்கலாம்.'
புழுதி விதைப்பு, நெல் சாகுபடியில் பின்பற்றும் முறைகள் ஆகியவை
அடுத்த இதழில்...
- Vikatan

No comments:

Post a Comment